தஞ்சை கோவில் குறித்து ஜோதிகா சர்ச்சை பேச்சு : இயக்குனர் சரவணன் விளக்கம்..

நடிகை ஜோதிகா சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கோவில்களை பராமரிக்கிற செலவை கொண்டு பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டலாம் என கூறியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

தஞ்சை பெரிய கோவிலை பார்த்து விட்டு போகச் சொன்னார்கள். ஆனால் அங்குள்ள மருத்துவமனையை பார்த்துவிட்டு கோவிலுக்கு போகாமலேயே வந்து விட்டேன் என்றார்.

இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

எதற்காக கோவிலை ஜோதிகா சுட்டிக்காட்ட வேண்டும். ஏன் சர்ச், மசூதிகளை கூற வேண்டியது தானே என ஹிந்து மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜோதிகாவை படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் அழைத்துச் சென்ற இயக்குனர் ரா.சரவணன் இதுகுறித்து அளித்துள்ள விளக்கம் வருமாறு:

சசிகுமார், ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின் போது தான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா.

தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால் எதையுமே செட் போடாமல் லைவ்வாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன்.

அதனால் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாகப் பார்த்து படப்பிடிப்பு செய்தோம். படப்பிடிப்புக்கு ஜோதிகா வந்தார்.

மருத்துவமனையின் மற்ற பகுதிகளையும் போய்ப் பார்த்தார். பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார்.

பிறந்த வடு மாறாத குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார்.

வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகே இப்படி அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா என்பது தான் அவருடைய வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.

அதனால் தான் கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

ஜோதிகாவுக்கு பெரிய கோயில் எவ்வளவு விருப்பமானது என்பதும், அவர் அந்தக் கோயிலை எந்தளவுக்கு மதிப்பார் என்பதும் எங்கள் யூனிட்டுக்கே நன்றாகத் தெரியும்.

தன் பிள்ளைகளுக்கு பெரிய கோயிலின் நினைவுச் சின்னங்களை அன்புப் பரிசாக வாங்கிச் சென்றவர் அவர்.

அரசு மருத்துவமனை பக்கம் வந்தால் நோய்த்தொற்று வந்துவிடும் என்றெண்ணி அதை செட் போட்டு எடுத்துவிட்டுப் போயிருக்கலாம்.

“எங்கள் மக்களுக்காகத்தான் படம். எங்கள் மக்களைப் பாருங்கள். அவர்களின் சூழலில் வாழுங்கள்” எனச் சொல்லிச் சொல்லிப் படம் எடுக்கிறேன்.

விவசாய மக்களோடு உச்சி வெயிலில் களைகொத்த வயற்காட்டில் இறங்கச் சொன்னேன்.

ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் வயலில் இறங்கிக் களை கொத்தினார் ஜோதிகா.

கால்கள் சுட்டுப் பொசுக்க காட்டிக் கொள்ளாமலே சமாளித்தார். ஆரத்தி சுற்றிய பெண்களோடு அளவளாவினார். பனை மட்டையில் கூழ்க் குடிக்கும் பக்குவம் கற்றார்.

ஒப்பாரிப் பெண்கள் மத்தியில் உட்கார்ந்து அழுதார். தூண்டில் வீரன் கோயிலில் மாவிளக்குப் போட்டுக் கும்பிட்டார்.

நடுக்குளத்தில் இறங்கி கோரை அறுத்தார். தஞ்சை மக்களின் வாழ்வியலை அறிய, அப்படியே வாழ அவர் கற்றுக் கொண்டார்.

தஞ்சைக்கே உரிய வாஞ்சை கலந்த வார்த்தைகளைப் பேசக் கற்றார். இந்த சிரமங்களை எல்லாம் படாமலே அவர் இந்தப் படத்தில் நல்லபடி நடித்திருக்க முடியும்.

அவருடைய நல்ல மனது தான் மருத்துவமனைகளையும், பள்ளிக் கூடங்களையும் பற்றி அவரைப் பேச வைத்தது.

இந்தப் பேரன்புக்கு இவ்வளவு பின்னணிகள் கற்பிப்பது நியாயமில்லை.

அதிலும் குறிப்பாக இந்தக் கொரோனா நேரத்தில் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் இக்கட்டான சூழலில் இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவது கொஞ்சமும் மனசாட்சியற்றது. இவ்வாறு சரவணன் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே