பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் – செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிய மம்தா பானர்ஜி..!!

பெகாசஸ் மென்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டியுள்ளார்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் விவாதப்பொருளாகி உள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அவரின் உறவினர்களும் ஒட்டுக் கேட்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மத்திய அரசை விமர்சனம் செய்கின்றன. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் பெகாசஸ் விவகாரம் குறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். தியாகிகள் தினத்தையொட்டி ஆன்லைன் வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய மம்தா பானர்ஜி, பெகாசஸ் விவகாரத்தை சுட்டிக்காட்டி, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனநாயகத்தை உருவாக்கும் ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகிய மூன்றிலும் பெகாசஸ் ஊடுருவி உள்ளது. பெகாசஸ் மிகவும் ஆபத்தானது. எனது செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இப்போது மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச முடியாத நிலையில் உள்ளேன்.

முன்னெச்சரிக்கையாக எனது செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிவிட்டேன். மத்திய அரசையும் இதேபோல் ஒட்டவேண்டும். இல்லாவிட்டால் நாடு அழிந்துவிடும். நீதித்துறையால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும், செல்போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும் என மம்தா பானர்ஜி பேசினார். டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மம்தாவின் உரையை தொலைக் காட்சி வாயிலாக எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே