Manjummel Boys (“குடிப்பொறுக்கிகள்”) – படத்தைக் கடுமையாக விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகன்..!!

குடிக்காமல் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் நாலு பேரை மலையாளப் படங்களில் எப்போதாவது பார்த்ததுண்டா? இந்தப் படமும் அந்தப் பொறுக்கிகளை ‘ஜாலியானவர்கள்’ என்று சொல்கிறது. அதற்கான சமூக ஏற்பை சினிமா வழியாக மெல்ல மெல்ல உருவாக்குகிறார்கள். அதாவது ஒரு தமிழ் கதைநாயகன் எந்தப் பொறுக்கிகளிடமிருந்து சாமானியர்களைக் காப்பாற்றுவாரோ அந்தப் பொறுக்கிதான் இன்றைய மலையாள சினிமாவின் கதைநாயகன்.

சமீபத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற “மஞ்சும்மல் பாய்ஸ்” படக்குழுவினரை நேரில் சந்தித்து கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் எனப் பலரும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் இப்படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து அவர், “சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி.

ஆனால் ‘யானை டாக்டர்’ எழுதியவன் என்னும் முறையில் இதை எழுதவேண்டியிருக்கிறது. புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துக்கள் வழியாக நேற்று ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது” என்பவர், அந்தப் படத்தின் க்ளைமாக்ஸிலுள்ள லாஜிக் பிழைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

“‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் தமிழில் வந்திருந்தால் இங்குள்ள எளிய விமர்சகர்கூட ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார்கள். அதெப்படி தமிழ் நாளிதழ்களில் செய்திவெளிவந்த அவ்வளவு பெரிய இடர், ஒரு வீர சாதனை கேரளத்தில் அந்த ஊர்க்காரர்களுக்கு மட்டும் தெரியாமலேயே இருந்தது.

மஞ்சும்மல் பையன்கள் அதை ஊரில் சொல்லவே இல்லையா? அது ஒருவன் இன்னொருவனுக்காக உயிர்கொடுக்கத் துணிந்த தருணம், அதை அப்படியே மூழ்கடித்து வைத்தார்களா என்ன? நாட்கணக்கில்கூட செய்தி கசியவில்லையா? க்ளைமாக்ஸ் நெகிழ்ச்சிக்காக சமையல் செய்து உருவாக்கப்பட்ட காட்சி அது. ஆனால் மல்லுப்படம் என்றால் அது ரியலிசம் என்பார்கள் நம்மூர் அரைவேக்காடுகள்” என்றவர் அப்படத்தை விமர்சிப்பதன் மூலமாக கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்குச் சுற்றுலா வரும் இளைஞர்களையும் சாடியுள்ளார்.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது. வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது.

குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்துகொண்டிருக்கும் – இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள். ஐயமிருந்தால் செங்கோட்டை – குற்றாலம் சாலையிலோ, கூடலூர்- ஊட்டி சாலையிலோ சென்று பாருங்கள் வழிநெடுக உடைந்த, உடையாத புட்டிகளாகவே கிடக்கும். அதையும் இப்படத்தில் பெருமையாகக் காட்டுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, கேரளா சினிமாவின் சமகாலப் போக்கு ஆபத்தானது என்ற வாதத்தையும் முன்வைத்துள்ளார். “கேரள சினிமா தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக இருப்பதென்றாலே குடித்துச் சண்டைபோட்டு, வம்பிழுத்து, வாந்தி எடுத்து, சாமானியர்களை நிலைகுலையச் செய்து கும்மாளமிடுவது என்றே காட்டி வருகிறது.

குடிக்காமல் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் நாலு பேரை மலையாளப் படங்களில் எப்போதாவது பார்த்ததுண்டா? இந்தப் படமும் அந்தப் பொறுக்கிகளை ‘ஜாலியானவர்கள்’ என்று சொல்கிறது. அதற்கான சமூக ஏற்பை சினிமா வழியாக மெல்ல மெல்ல உருவாக்குகிறார்கள். அதாவது ஒரு தமிழ் கதைநாயகன் எந்தப் பொறுக்கிகளிடமிருந்து சாமானியர்களைக் காப்பாற்றுவாரோ அந்தப் பொறுக்கிதான் இன்றைய மலையாள சினிமாவின் கதைநாயகன்.

காரணம், எர்ணாகுளம் மையமிட்ட ஒரு சிறு போதையடிமைக் கும்பல் இன்றைய மலையாள சினிமாவின் மையத்தில் உள்ளது. அங்கே மது வெறி இரவும் பகலும். அதைவிட மோசமான போதைகள், போதைப்பார்ட்டிகள் கேரளத்தில், குறிப்பாக எர்ணாகுளத்தில், உள்ள அளவு இந்தியாவில் எங்குமே இல்லை. மலையாளக் கதாநாயக நடிகர்கள்கூட போதை மருந்து வழக்குகளில் சிக்கிக்கொள்வது அடிக்கடி செய்திகளில் வருகிறது. அவர்கள்தான் மலையாளச் சமூகத்தையே போதைவெறியை இயல்பாக எடுத்துக்கொள்ளப் பழக்கப்படுத்துகிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு ‘கிளி போயி’, ‘ஒழிவுநேரத்தே களி’. ‘வெடிவழிபாடு’, ‘ஜல்லிக்கட்டு’ போன்று போதையையும் விபச்சாரத்தையும் normalize செய்யும் சிறிய படங்கள் கேரளத்தில் வெளிவந்தன. உள்ளீடற்ற அசட்டுப் போலிப்படங்கள் அவை. அவை அறிவுஜீவிகளால் ‘இயல்பான கலைப்படைப்புகள்’ என கொண்டாடப்பட்டன. இங்கும் முதிரா அறிவுஜீவிகள் அவற்றைக் கொண்டாடினார்கள். இன்று அந்தப் போக்கு மையச் சினிமாவாக ஆகியிருக்கிறது. கேரளத்தின் நலம்நாடும் ஓர் அரசு இருந்தால் இந்த சினிமாக்காரர்கள்மேல் நேரடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று காட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இந்தக் கும்பல் சுற்றுலாத் தலங்களைச் சீரழிப்பது ஒரு பக்கம். ஆனால் அடர்காடுகளுக்குள் அத்து மீறுகிறார்கள். அதற்காக ஊடுவழிகளை எல்லாம் தேர்வு செய்கிறார்கள். எந்த சட்டத்தையும் பொருட்படுத்துவதில்லை. எந்த எச்சரிக்கைகளையும் பேணுவதில்லை. கொய்யாப்பழங்களுக்குள் மிளகாய்ப்பொடி நிறைத்து குரங்குகளுக்கு கொடுக்கிறார்கள். யானைகளை நோக்கி புட்டிகளை வீசுகிறார்கள். அடர்காடுகளுக்குள் உச்சத்தில் பாட்டுபோட்டு கூத்தாட்டம் போடுகிறார்கள்” என்றவர் படத்தின் நாயகர்களைக் குற்றவாளிகளாகக் கருதவேண்டும் என்றும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார்.

“இந்தப் பொறுக்கிகளை எளியவர்களின் கொண்டாட்டம் என்று காட்டி நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உன்னதமாக்குகிறது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. அவர்களை தியாகிகள், நட்பின் இலக்கணங்கள் என்று சொல்ல முயல்கிறது. எந்த பொறுக்கிக் கும்பலுக்கும் அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கும். குற்றவாளிக் கூட்டங்களுக்குள்ளேயே தியாகவுணர்வு இருக்கும். அதெல்லாம் உயர்ந்த உணர்வுகள் அல்ல. உண்மையிலேயே இப்படி நடந்து, அதில் ஒருவனுக்குத் தேசிய விருது அளிக்கப்பட்டிருப்பதாக படத்தின் இறுதியில் செய்தி காட்டப்படுகிறது. சட்டப்படிச் சிறையில் தள்ளப்பட வேண்டியவன் அவன்.

இந்தக் கும்பல்களைப் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இந்தச் சினிமா உருவாக்குமென்றால் நல்லது. இவர்களை போலீஸ் நேரடியாகவே குற்றவாளிகளாக மட்டுமே நடத்தவேண்டும். ஒருபோதும் ஒருவகையிலும் ஆதரிக்கக் கூடாது. அவ்வப்போது இவர்கள் எங்காவது சிக்கிச் சாவதுகூட நல்லதுதான். நம் காடுகள் காப்பாற்றப்படும். அது இவர்களுக்கு இயற்கை அளிக்கும் இயல்பான தண்டனை” என்று வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார்.

இந்தப் பதிவு தற்போது ஆதரவு, எதிர்ப்பு என்று இரண்டையும் பெற்று வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே