பள்ளியில் சாதி பெயரைக் கூறி மாணவரின் முதுகில் பிளேடால் கீறிய சக மாணவர்கள்

மதுரை அருகே பள்ளியில் சாதிப் பெயரைக் கூறி மாணவரின் முதுகில் சக மாணவர்கள் பிளேடால் கீறிய சம்பவத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாணவரின் தாயார் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

சாதியின் பெயரால் ஆணவக்கொலை பள்ளிகளில் மாணவர்கள் சாதிரீதியாக நடத்தப்படுகிறார்கள் என்ற செய்திகளை கடந்து சென்றிருப்போம்.

இந்த சாதிவெறி பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியிலும் வேர் விட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் சரவணக்குமார் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்று மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்புவதற்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது சக மாணவர்கள் இவரது புத்தகப்பையை மறைத்து வைத்துள்ளனர்.

தம்முடைய புத்தகப்பையை ஏன் மறைத்து வைத்தீர்கள்?? என கேள்வி கேட்ட மாணவரை சாதிரீதியாக திட்டியதுடன், மாணவனின் முதுகை பிளேடால் கீறியுள்ளனர் சக மாணவர்கள்.

வலி தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த மாணவர்.

தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் மஹாஈஸ்வரன் என்ற மாணவன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த சரவணகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சரவணகுமாரின் தாயார் ராசாத்தி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அதில் தனது மகன் தாக்கப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த காரணத்தால் தாங்கள் மஹாஈஸ்வரனின் குடும்பத்தினரால் மிரட்டப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் காயமடைந்த தனது மகனுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரவணகுமாரின் தாயார் ராசாத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே