பாகிஸ்தானில் பேருந்தின் மீது ரயில் மோதியதில் 19 சீக்கியர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்து மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் பேருந்தில் வந்த 19 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

ஷேய்குபுரா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில், சீக்கிய பக்தர்கள் வந்து கொண்டிருந்த பேருந்து மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 சீக்கிய பக்தர்கள் மரணம் அடைந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நங்கனா சாஹேப் சென்றிருந்த சீக்கிய பக்தர்கள், வழிபாடுகளை முடித்துக் கொண்டு பேருந்தில் குருத்வாரா சச்சா சௌதாவுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். 

அந்த பேருந்தில் 25 பேர் இருந்துள்ளதாகவும், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில், பேருந்து தண்டவாளத்தைக் கடக்கும் போது, அவ்வழியாக வந்த ஷாஹ் ஹுசைன் விரைவு ரயில் பேருந்து மீது மோதியதில், பேருந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே