கைரேகை வைக்காமல் ஸ்மார்ட் ரேஷன் கார்டை காட்டி ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கைரேகை வைக்காமல் ஸ்மார்ட் ரேஷன் கார்டை காட்டி ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறலாம் என்று கூறியுள்ளார்.

பயோமெட்ரிக் முறையில் கைரேகை சரியாக வேலை செய்வதில்லை என புகார் எழுந்த நிலையில், அமைச்சர் காமராஜ் விளக்கமளித்துள்ளார்.

ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு ரூ.2500, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

அதில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார். தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கப்பட்டது.

இன்று முதல் தொடங்கி வருகின்ற டிசம்பர் 31ம் தேதி வரை வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படுகிறது.

முற்பகல் 100 பேர், பிற்பகலில் 100 பேருக்கு வழங்கும் வகையில் டோக்கன் வழங்க வேண்டும். எக்காரணத்தை கொண்டு ரொக்க பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே