அனுமதி பெறும்வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!!

அனுமதி அளிக்காத நிலையில் எப்படி வேல் யாத்திரை நடத்த முடியும் என, பாஜகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா விதிகளைப் பாரபட்சமில்லாமல் அனைத்துக் கட்சி, மத நிகழ்ச்சிகளுக்கும் அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாஜகவின் வேல் யாத்திரையைத் தடுக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், யாத்திரையில் எத்தனை பேர் பங்கேற்பர்? எத்தனை வாகனங்கள் கலந்துகொள்ளும் என்பன உள்ளிட்ட விவரங்களுடன் காவல் துறைக்கு விண்ணப்பம் அளிக்க பாஜக தரப்புக்கு அறிவுறுத்தியது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று (நவ. 10) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்து வாதிட்டார்.

அப்போது அவர், கடந்த 6, 8 மற்றும் 9-ம் தேதிகளில் பாஜகவினர் திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டதாகவும், அதில் கலந்து கொண்டவர்கள் தனிமனித விலகலைப் பின்பற்றவில்லை எனவும், முகக்கவசம் அணியவில்லை எனவும், பாஜக தலைவர் எல்.முருகன் முறையாக முகக்கவசம் அணியவில்லை எனவும் டிஜிபி அறிக்கையை மேற்கோள் காட்டி வாதிட்டார்.

மேலும், வேல் யாத்திரை காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளானதாகவும், இந்த யாத்திரையில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இது கோயில் யாத்திரை அல்ல, இது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை எனக் கூறிய தலைமை வழக்கறிஞர், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக, பொறுப்புடன் செயல்படாமல், சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றாமல் செயல்பட்டுள்ளதாகவும், 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வதாகக் கூறிவிட்டு, அதை மீறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 38 கோயில்களில் 30 பேருடன் 18 வாகனங்களில் சென்று வழிபாடு நடத்த அனுமதியளிக்கக் கோரி கடந்த 9-ம் தேதி விண்ணப்பித்ததாகக் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அனுமதி அளிக்காத நிலையில், எப்படி யாத்திரை செல்ல முடியும்? கடந்த மூன்று நாட்களாக கட்சித் தலைவர்கள் கூடியுள்ளனர்.

கட்சித் தலைவர் பெரிய வேல் ஒன்றை ஏந்திச் செல்கிறார். இது ஆயுதச் சட்டப்படி குற்றம்” என்று சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த பாஜக தரப்பு வழக்கறிஞர், அது மரத்தால் செய்யப்பட்ட வேல் என்றும், யாத்திரைக்கு அனுமதி கோரிய தங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து அமைதியாகச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

உடனே நீதிபதிகள், தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, அனைவருக்கும் பொதுவாகவே கரோனா விதிகளை அமல்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பாஜகவினர் அளித்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த டிஜிபி, சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.க்களையும், காவல் ஆணையர்களையும் அணுக அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் அடிப்படையில், ஓசூரில் யாத்திரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதை ஏற்ற நீதிபதிகள், யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர பாஜகவுக்கு அனுமதியளித்ததுடன், வேல் யாத்திரையைத் தடுக்கக் கூடாது என்ற இடைக்கால கோரிக்கை மனுவை முடித்து வைத்தனர்.

மேலும், கரோனா விதிகளைக் கண்டிப்புடன் அனைத்துக் கட்சிக் கூட்டங்கள், மத கூட்டங்களுக்கும் பாரபட்சமில்லாமல் அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நவம்பர் 16-ம் தேதி வரை மத நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே