2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்து கடந்த 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான படம் ஜெய் பீம்.

இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தப் படத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வேடத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது. பின்னர் அந்த சின்னம் படத்தில் இருந்து மாற்றப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவைக் கண்டித்து அறிக்கை விடுத்திருந்தார். அதற்கு நடிகர் சூர்யா, ‘எந்தவொரு தனி நபரையோ, சமுதாயத்தையோ அவமிதிக்கும் நோக்கம் தனக்கில்லை’ என விளக்கமளித்தார்.

தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூர்யா, ராஜா கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் பெயரில் ரூ.10 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் என்றும், குறவர் சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த விவகாரத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்கள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரி அளிக்கப்படும் என்றார். இதனையடுத்து நடிகர் சூர்யாவின் ‘வேல்’ திரைப்படம் திரையரங்கில் நுழைந்த பாமகவினர் படத்தை நிறுத்தக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் ‘வீ ஸ்டேண்ட் வித் சூர்யா’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல், பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே