யூடியூப் பார்த்து பிரசவம்..!! காதலன் கைது..!

யூடியூப் பார்த்து காட்டுப் பகுதியில் பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சௌந்தர் என்பவர் அங்குள்ள கேஸ் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.

இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர்.

இதனால் அவர்கள் பல இடங்களுக்கு சென்று சுற்றி உல்லாசம் அனுபவித்ததில் கல்லூரி மாணவி கர்ப்பமாகியுள்ளார்.

இதனை 8 மாதங்களாக வீட்டில் மறைத்து வந்த மாணவிக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

இதனை மாணவி சௌந்தரிடம் கூற இருவரும் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றனர்.

அங்கு, வீட்டிற்குத் தெரியாமல் கல்லூரி மாணவிக்கு சொளந்தர், Youtube-ஐப் பார்த்து பிரசவம் பார்க்க முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் கை பகுதி மட்டும் தனியாக முதலில் வந்திருக்கிறது.

பின்னர் இளம்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாகவே, இதனால் அச்சமடைந்த சௌந்தர், பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தாகக் கூறி, பெண்ணை மேல் சிகிச்சைக்காக சென்னை ராயபுரம் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த பெற்றோர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்றனர்.

இதனிடையே, விபரீதமாக பிரசவம் பார்த்து, குழந்தை உயிரிழக்கக் காரணமான செளந்தரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே