ஜூலை மாதம் வெளியாகிறது விக்ரமின் ’கோப்ரா’!

ரஷ்ய அதிபர் புதினின் மாளிகையில் பல்வேறு காட்சிகள் படாமாக்கப்பட்டன.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ  தயாரிக்கும் இந்தப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான இந்தப் படத்தின் “தும்பி துள்ளல்” பாடல் சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு அறிவிப்பின் போது ரஷ்யாவில் சில முக்கியமான காட்சிகளை கோப்ரா படக்குழு படமாக்கி வந்தது. ரஷ்யாவில் பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக ஷூட்டிங்கை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழுவினர் இந்தியா திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. ரஷ்யாவில் எடுக்க வேண்டிய முக்கிய காட்சிகளை கிராஃபிக்ஸ் பயன்படுத்தி கிரீன் மேட்டில் எடுக்க படக்குழு திட்டமிட்ட நிலையில், எதிர்பார்த்ததை விட கூடுதல் பொருட்செலவும், கால அவகாசமும் ஏற்படும் என்பதால் அந்த முடிவு கை விடப்பட்டது.

பின்னர் ஓராண்டுக்குப் பிறகு ரஷ்யாவிலேயே கடந்த பிப்ரவரி 23-தேதி கோப்ராவின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனிடையே, விக்ரம் நடிக்கும் முக்கிய காட்சிகள் ரஷ்ய தலைநகர் பீட்டர்ஸ்பர்க்கில் 13 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளன.

ஷூட்டிங் முடித்து இந்தியா திரும்பிய படக்குழுவினர் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து, ” ரஷ்ய அதிபர் புதினின் மாளிகையில் பல்வேறு காட்சிகள் படாமாக்கப்பட்டன. பாதுகாப்பு மிகுந்த ஒரு நாட்டின் அதிபர் மாளிகையிலேயே ஷூட்டிங் நடத்திய தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. சினிமா காட்சிகள் எடுப்பதற்கு  இந்தியாவில் உள்ளது போல கடும் கட்டுப்பாடுகள் ரஷ்யாவில் இல்லாதது இந்த படத்தை விரைவாகவும், எளிமையாகவும் எடுப்பதற்கு ஏதுவாக இருந்தது” என்றார்.

கோப்ராவில் விக்ரமின் கதாப்பாத்திரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அஜய், “கடும் விஷம் கொண்ட கிங் கோப்ரா பாம்பு  எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்துவது போல, எதிர்பாராமல் செயல்படும் பல கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டிய படமாக கோப்ரா இருக்கும்” எனத் தெரிவித்தார்.

கொரோனா காரணத்தால் இந்த படத்துக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த பட்ஜெட் ஏற்கனவே அதிகரித்துள்ளது. 95% காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு, போஸ்ட் புரொடக்சன் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. வரும் ஜூலை மாதம் கோப்ரா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே