அமெரிக்கா – தாலிபான் 18 ஆண்டுகால சண்டை..? கையெழுத்தாகும் அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தம்

18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 

ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 2002ம் ஆண்டுமுதல் போர் நடைபெற்று வருகிறது.

இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசு படைக்கு உதவும் வகையில் 14 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்ட காலமாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வரவும், தனது வீரர்களை வாபஸ் பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார்.

இதையடுத்து, தலிபான்கள்- அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் இருந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா – தலிபான்கள் இடையே கத்தார் நாட்டின் தோஹாவில் இன்று மாலை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இந்த உடன்படிக்கை மூலம், ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும்.

ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்தியா சார்பில் வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா கலந்து கொள்கிறார்.

முன்னதாக காபூல் சென்ற அவர், ஆப்கனில் அமைதி மற்றும் ஸ்திரமான நிலை ஏற்படுவதற்கு இந்தியாவின் பரிபூரண ஆதரவை தெரிவித்தார்.

ஆப்கன் வெளியுறவு அமைச்சரை சந்தித்த அவர், அமெரிக்கா-தலிபான் இடையிலான அமைதி உடன்படிக்கை குறித்த இந்தியாவின் கண்ணோட்டம், ஆப்கானிஸ்தான் வளர்ச்சி பெற இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆப்கானிஸ்தானில் அமைதி, நல்லிணக்கம் ஏற்படுவதில் முக்கிய பங்காற்றி வரும் இந்தியா, அந்த நாட்டில் பல்வேறு மறுசீரமைப்புத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

ஆப்கனின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தையே இந்தியா தான் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே