ராமர் கோயில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியது என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத் கூறியுள்ளார். ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகளாக காத்திருந்தோம் என பேசினார்.
அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. அடிக்கல் நாட்டு விழாவிற்காக இன்று காலை பிரதமர் மோடி அயோத்தி வந்தடைந்தார். டெல்லியில் இருந்து விமானத்தில் லக்னோ வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார்.
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றார். பின்பு அனுமன் கர்கி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் குழந்தை ராமர் கோயிலில் வழிபாடு நடத்தினார். அதனை தொடர்ந்து குழந்தை ராமரை தரையில் விழுந்து வணங்கிய அவர், கோயிலில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டார்.
வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை சடங்குகள் துவங்கின. பூமி பூஜை நிகழ்வில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்றனர். 40 கிலோ வெள்ளி செங்கலை நிறுவி, ராமர் கோவில் கட்டுமான பணிக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.