ஊரடங்கையும் மீறி திடீரென 1 லட்சம் பேர் திரண்ட இறுதிச்சடங்கு ஊர்வலம்..!

இந்தியாவின் அண்டைநாடான வங்கதேசத்தில் ஊரடங்கு உத்தரவையும் மீறி இஸ்லாமிய தலைவர் ஒருவரின் இறுதி சடங்கில் லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வங்கதேசத்தில் இதுவரை 2,948 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 101 பேர் உயிர் இழந்துள்ளனர்.

சோதனை கருவிகள் பற்றாக்குறை இருப்பதால் பரிசோதனைகள் மேற்கொள்வதில் அந்நாட்டில் சிக்கல் எழுந்துள்ளது. 

மேலும், வங்கதேசத்திலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், வங்கதேசத்தின் முக்கிய இஸ்லாமிய அமைப்பின் தலைவர் Maulana Zubayer Ahmad Ansari என்பவர் மரணமடைந்ததை அடுத்து, ஊரடங்கு உத்தரவையும் மீறி லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இறந்த தலைவரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட தலைவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள குறைந்தபட்ச நபர்களுக்கு மட்டுமே அனுமதிவழங்கப்பட்டநிலையில், ஏராளமான மக்கள் சாலையில் கூடியதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை.

இதுபோன்று அரசின் உத்தரவை மீறும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே