கொரோனாவால் உயிரிழப்போரை மரியாதையுடன் அனுப்பி வைக்க ஒத்துழைக்க வேண்டும் : மாநகராட்சி வேண்டுகோள்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படி அடக்கம் அல்லது தீயிட்டு தகனம் செய்யப்படுகிறது.

ஆனால் உடல்களை தங்கள் பகுதிக்கு அருகில் அடக்கம் செய்தால் தங்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதனால் சில நாட்களுக்கு முன்பு இறந்தவர்களின் உடல்களை அடக்கள் செய்ய ஒருசில இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த கடிதத்தில் “இறந்தவர்களின் உடல்கள் சரியான வழிமுறைகள் கொண்டே கையாளப்படுகின்றன எனவும் ஆழமாக புதைப்பது, தீயிட்டு தகனம் செய்வது இரண்டுமே உலக சுகாதார அமைப்பு, இந்திய அரசு மற்றும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட முறைகள் என்றும் இதனால் அருகிலிருப்பவர்கள் அச்சப்பட தேவையில்லை” என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த உலகிலிருந்து பிரிந்து செல்பவர்களை மரியாதையுடன் அனுப்பி வைக்க எங்களுடன் ஒத்துழைக்க நாங்கள் மக்களிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே