குடிபோதையில் பெண் காவலரை ஒருமையில் திட்டிய அதிமுக நிர்வாகி…

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட விவசாய அணி செயலாளர் கதிர் தண்டபாணி குடிபோதையில் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளரும் தற்போதைய விவசாய அணி செயலாளருமான கதிர் தண்டபாணி நேற்று நான்கு சக்கர வாகனத்தில் சேலம் நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.

அப்போது ஒரு சுங்கச்சாவடி அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து தண்டபாணியின் காரை நிறுத்தி பெண் காவலர் ஒருவர் அனுமதி சீட்டு பெற்றிருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு குடிபோதையில் இருந்த அவர் இல்லை என பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து காரை ஓரங்கட்ட சொன்ன பெண் காவலரிடம் அதெல்லாம் முடியாது என மறுப்பு தெரிவித்தார்.

உடனே 144-ல உங்களுக்கு எங்கிருந்து மதுபானம் கிடைத்தது என்று அந்த காவலர் கேள்வி எழுப்பினார். அதற்கு குடிபோதையில் இருந்த தண்டபாணி, “யாரை வேண்டுமானாலும் வரச்சொல். நான் பதில் சொல்லுகிறேன். உன் கிட்ட பதில் சொல்ல முடியாது.” என்று கூறிவிட்டு காவலர்கள் சொல்ல சொல்ல காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டார்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆளும் கட்சியினர் இதுபோன்று அடாவடியில் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே