வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை

வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும், வியாபாரிகள் அதிகமாக கையிருப்பு வைத்திருந்தாலோ, அதிக விலைக்கு விற்றாலோ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக திண்டுக்கல், திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் வரத்து குறைந்து கடந்த வாரம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக மழை பெய்ததால் அங்கிருந்து விற்பனைக்கு வரும் பெரிய வெங்காயம் வரத்து குறைத்து விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் வரை 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

இந்நிலையில், வெங்காய விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக வெங்காயத்தை கையிருப்பு வைத்திருக்கும் சில்லரை விற்பனையாளர்கள் மீதும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக கையிருப்பு வைத்திருக்கும் மொத்த விற்பனையாளர்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் சென்னையிலுள்ள நுகர்பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் பகுதியிலுள்ள வெங்காய மொத்த விற்பனை நிலையங்களிலிருந்து தரமான வெங்காயத்தை கொள்முதல் செய்திட கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் நாசிக் சென்றிருப்பதாகவும், அங்கு கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தை பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே