ரூ.20 கோடி ஜாமின் தொகையை கார்த்தி சிதம்பரத்திற்கு திருப்பி அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வெளிநாடு செல்வதற்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்திருந்த 20 கோடி ரூபாய் ஜாமின் தொகையை அவரிடம் திருப்பி அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை தொகுதி எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ். மீடியா உள்ளிட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளன.

இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களில் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் கார்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அப்போது, மாதத்திற்கு தலா 10 கோடி வீதம் 20 கோடி ரூபாயை பிணைத்தொகையாக செலுத்தி விட்டு வெளிநாடு செல்லும்படி உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.

ஆனால், இந்த பிணைத்தொகையை நீதிமன்றம் திருப்பித் தரவில்லை என குற்றம்சாட்டிய கார்த்தி சிதம்பரம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரம் அளித்த 20 கோடி ரூபாயை திருப்பி அளிக்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே