கட்சி பதாகைகளில் யார் யார் படங்கள் இடம்பெற வேண்டும் என ஸ்டாலின் கடிதம்..!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,திமுக பேனர்களில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அவரது கடிதத்தில்,இந்தத் தேர்தல் தி.மு.க.வுக்கு வாழ்வா – சாவா என்று சிலர் விவாதிக்கிறார்கள்.

எனக்கு அதில் எள்ளளவும் உடன்பாடு இல்லை என்பதை அன்றைய ஆலோசனைக் கூட்டத்திலும் தெரிவித்தேன்.

‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற முத்திரை வரிகளைத் தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். 

அவரது மூத்த பிள்ளையான “முரசொலி” ஏட்டின் முகப்பில் இப்போதும் அது மிளிர்கிறது; நமது இலட்சியத்தை நாட்டுக்குப் பறை சாற்றுகிறது.

இந்தத் தேர்தல் களம் என்பது, கழகம் வாழுமா – வீழுமா என மனப்பால் குடித்தபடி, மார்தட்டிக் காத்திருப்போருக்கான களம் அல்ல.

தமிழ்நாடு மீள வேண்டுமா – வாழ வேண்டுமா என்பதற்கான தேர்தல் களம் என்பதைக் கழகத்தினரும், பொதுமக்களும், தமிழக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டோரும் உணர்ந்திருக்கிறார்கள்.

பதாகைகள், சுவரொட்டிகள் என எதிலும் பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் தவிர வேறு யாருடைய படங்களும் இடம்பெறக் கூடாது.

பகுதி, ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் முழுமையாகச் சென்று சந்திப்பு நடத்திட வேண்டும். (பத்து நாட்களில் அனைத்து வார்டு, ஊராட்சிகளை முழுமையாக சந்தித்து இருக்க வேண்டும்).

குரல் வாக்கெடுப்பு மூலம், ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தீர்மானத்தைப் பலத்த ஒலியுடன் நிறைவேற்ற வேண்டும்.

திமுக சார்பில் வழங்கப்படும் தொப்பிகள், ஆட்சி மீதான குற்றப்பத்திரிகைகள் ஆகியவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே