மஹாராஷ்டிர அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகள் பற்றி அறியாத காரணத்தால் கைது சம்பவம் நடைபெற்றதாக சுரேஷ் ரெய்னா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பங்கேற்கவில்லை.

பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் ரெய்னாவின் உறவினா்கள் இருவர் உயிரிழந்தார்கள்.

இதையடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகினார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.

இந்நிலையில் கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக சுரேஷ் ரெய்னாவை இன்று அதிகாலை மும்பை காவல்துறை கைது செய்தது. 

மும்பை விமான நிலையத்தின் அருகில் உள்ள தனியார் கிளப்பில் ரெய்னாவைக் கைது செய்த காவலர்கள், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தார்கள்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி தனியார் கிளப் இயங்கியதாலும் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததாலும் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கிளப்பில் இருந்த சுரேஷ் ரெய்னா, பாலிவுட் பிரபலம் சுசானே கான், பாடகர் குரு ரந்தாவா உள்ளிட்ட 34 பேர் கைது செய்யப்பட்டார்கள். பிறகு ரெய்னா, சுசானே ஆகியோரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் இச்சம்பவம் பற்றி சுரேஷ் ரெய்னா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்தார் சுரேஷ் ரெய்னா. படப்பிடிப்பு இரவு வரை நீண்டது. இரவு உணவுக்காக நண்பரால் அழைக்கப்பட்டிருந்தார். இதன்பிறகு தில்லி செல்ல இருந்தார். உள்ளூர் நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை ரெய்னா அறியவில்லை.

அதை அவரிடம் எடுத்துச் சொன்ன பிறகு, உடனடியாக அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றினார். இச்சம்பவம் குறித்து ரெய்னா மிகவும் வருந்தினார். அரசின் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் அவர் எப்போதும் உறுதியாக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே