மாநில தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் பேசுகிறார் பொன்.ராதாகிருஷ்ணன் : ஜெயக்குமார்

மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டிற்கு என்னத் திட்டங்களை கொண்டு வந்தார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

தமிழ்நாடு தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்ற, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதனை கூறியிருக்கிறார்.

சென்னை சைதாப்பேட்டை மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தாம் சார்ந்த கட்சியில் பதவி கிடைக்காத கோபத்தை, தங்கள் மீது, பொன்.ராதாகிருஷ்ணன் திருப்புவது ஏன் என்றும் வினவியிருக்கிறார்.

சட்டம்-ஒழுங்கு உட்பட பல்வேறு துறைகளில், தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக மத்திய அரசு, விருதுகள் அளித்து வரும் நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனின் புகார் ஏற்புடையது அல்ல என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்.

மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் தமிழ்நாட்டை, மாநில அரசு நிர்வாகத்தை பாராட்டும் நிலையில், தவறான கருத்துகள் மூலம், பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய பாஜக அரசை எதிர்க்கிறாரா? என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே