சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. அதிமுகவில் இருந்து நீக்கம்..!!

சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த சேந்தமங்கள் எம்எல்ஏ சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு.

சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் சுயேட்சையாக போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

கொல்லிமலை பகுதியை உள்ளடக்கிய சேந்தமங்கலம், தமிழகத்தின் 2 பழங்குடியின தொகுதிகளில் ஒன்று.

இந்த தொகுதியில் தற்போது அதிமுக எம்எல்ஏவாக இருக்கும் சந்திரசேகரனுக்கு மீண்டும் போட்டியிட அதிமுக வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், அவர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த சேந்தமங்கள் எம்எல்ஏ சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

அதில், கழகத்தின் கொள்கை, குறிக்கோளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் ஈடுபட்டதாலும் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து, சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தது மட்டுமில்லாமல், அதிமுக வேட்பாளரை தோற்கடிப்பேன் என்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ள காரணத்தாலும் இன்று முதல் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளனர். சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தகத்து.

இதையடுத்து, அதிமுகவின் எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பில் வி.ராமச்சந்திரன் (எம்ஜிஆர் பேரன்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்றும் கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கவேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீசெல்வம் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே