எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பிரார்த்தனை: சூப்பர் ஸ்டார் வெளியிட்ட வீடியோ!!

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேல் பல மொழிகளில் பாடி மக்களை மகிழ்வித்தவர் எஸ்.பி.பி என புகழாரம் சூட்டியுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று உள்ளது என்றும், இரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்பி விடுவேன் என்றும் அவரே வீடியோவில் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

ஆனால் கடந்த 13ம் தேதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவ குழுவின் ஆலோசனையின்படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டன.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்திருந்தார்.

எஸ்பிபி விரைவில் நலமடைய திரையுலகினர், நலம் விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையால் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடி கோடி மக்களை மகிழ வைத்த மதிப்பிற்குரிய எஸ்.பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என கேள்விபட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இன்னும் தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்.பி.பி அவர்கள் சீக்கீரம் குணம் அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே