தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக பதவியேற்று சட்டப்பேரவையிலிருந்து வெளியே வந்த அஜித் பவாரை சரத் பவார் மகள் சுப்ரியா சுலே அன்புடன் அணைத்து வரவேற்றார்.
மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்ற தேவேந்திர பட்நாவிஸ், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை இன்று நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று காலை உத்தரவிட்டது.
இதையடுத்து துணை முதலமைச்சர் அஜித் பவார் ராஜினாமா செய்தார். இதேபோல தங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸும் நேற்று மாலை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து மகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
இந்த கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். எம்.எல்.ஏ-களுக்கு தற்காலிக சபாநாயகர் காளிதாஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ், சிவேசோனாவின் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்த அஜித் பவார் உள்ளிட்டோர் எம்.எல்.ஏவாக பதவியேற்றனர்.
சட்டசபையில் பதவியேற்று வெளியே வந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சரத் பவார் மகள் சுப்ரியா புன்னகையுடன் வரவேற்றார். அப்போது அஜித் பவார் வெளியே வந்த போது அவரை அன்புடன் அணைத்து வரவேற்றார்.