கொரோனா என்ற கொடிய அரக்கனிடம் இருந்து காப்பார் மு.க.ஸ்டாலின் – வைகோ நம்பிக்கை..!!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று அறிவாலயத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து அவருடன் உரையாடுகையில், ‘தேர்தல் பணிகள் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தடுப்புப் பணிகள் முறையாக நடக்கவில்லை; முடங்கிப் போய்விட்டன’ என்ற தம் கவலையைத் தெரிவித்தார்.

அதற்கு ஸ்டாலின் அவர்கள், ‘கொரோனா தடுப்புப் பணிகளை முழுவேகத்தில் இயக்குவேன்; கொடிய கொரோனாவில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றுவதே என்னுடைய முதல் பணி;  இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு உழைப்பேன்’ என்றார்.

உங்கள் கருத்தை, ‘நான் செய்தியாளர்களிடம் சொல்லட்டுமா?’ என்று வைகோ கேட்டபோது, தாராளமாகச் சொல்லுங்கள் என்று, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, இந்தியாவின் மொத்த பார்வையும் தமிழகம் பக்கம் உள்ளது. திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மக்களை காக்க ஸ்டாலின் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார். கொரோனா என்ற கொடிய அரக்கனின் பிடியில் இருந்து மக்களை மீட்பார். தமிழகத்திற்கு இது ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே