கே.சி.வீரமணி வீட்டில் மணல் – ஆட்சியரிடம் அறிக்கை..!!

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில், 551 யூனிட் மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக வேலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் நடந்த சோதனையில் பணம், நகை, சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் வேலூர் மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் பெர்னார்டு கடந்த 16-ம் தேதி இரவு 11 மணியளவில் ஆய்வு செய்தார். அங்கு 551 யூனிட் மணல் இருப்பதும், அதன் மதிப்பு ரூ.33 லட்சம் இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள மணல் இருப்பு குறித்த அறிக்கையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் அவர் அறிக்கையாக அளித்துள்ளார்.

மேலும், இவ்வளவு மணல் எங்கிருந்து வாங்கப்பட்டது? அதற்கான ரசீது இருக்கிறதா என்றும் அப்படி ரசீதுகள் இருந்தால் அதை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வீரமணியிடம் விளக்கம் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்படி ஆவணங்களை அவர் சமர்ப்பிக்காவிட்டால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே