சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!!

சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர், இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது.இதனால், விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கும் என கூறி இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து,விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலம் கையகப்படுத்த தடை விதித்தது. 

நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 8 வழிச்சாலை திட்ட செயல் இயக்குனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், சென்னை -சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அதாவது ,சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் திட்ட செயல் இயக்குனர் தரப்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே