பக்தர்களின் பரவசத்தில் சபரிமலை மகரஜோதி!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை நடைபெற்றதையொட்டி பொன்னம்பல மேட்டில் தெரிந்த மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் தரிசித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு கால பூஜைகளுக்காக கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது.

31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள்  சாமி தரிசனம் செய்தனர்.

மகரவிளக்கு பூஜை தினத்தில் மகரசங்கிரம பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மகரசங்கிரம பூஜை இன்று அதிகாலை 2.09 மணிக்கு நடந்தது.

அதிகாலையில் இந்த பூஜை நடந்ததால் நேற்று இரவு கோவில் நடை சாத்தப்படவில்லை.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட்ட கோயில் நடை இன்று அதிகாலை மகரசங்கிரம பூஜை முடிந்து 2.30 மணிக்கு சாத்தப்பட்டது. ஒன்றரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 

சபரிமலையில் மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை நடை திறந்திருந்தது மிக அபூர்வமான நிகழ்வாகும்.

இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜைக்காக, பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

மாலை 6.30 மணிக்கு ஊர்வலம் சன்னிதானத்தை அடைந்தது. பின்னர் திருவாபரணம் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. 

கோவிலில் தீபாராதனை காட்டப்பட்ட அதே நேரத்தில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி காட்சி அளித்தது.

ஜோதி வடிவத்தில் தூரத்தை தெரிந்த ஒளியினை கண்டதும், பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். 

மகர விளக்கு பூஜைக்காகவும், மகர ஜோதி தரிசனத்திற்காகவும் சபரிமலையில் பல லட்சம் பக்தர்கள் குவிந்திருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே