தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035ஆவது சதய விழா கொண்டாட்டம்..!! தமிழில் வழிபாடு..!!

ராஜராஜ சோழனின் சதய விழாவில் முதன்முறையாக தமிழில் மந்திரங்கள் சொல்லி பூஜை செய்யப்பட்டது.

பூஜையின்போது திருவாகசம், தேவாரம் பாடல்களை பாடினர். தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையினை ஏற்று இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டதின் பேரில் தமிழில் பாடி பூஜை செய்யப்பட்டது.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராஜராஜன் பிறந்த நாள் விழாவான சதய விழா இன்று 26.10.2020 திங்கட் கிழமை நடைபெறுகிறது.

கொரோனா காலம் என்பதால் ஒருநாள் நிகழ்வாக விழாவை நடத்திடத் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை முடிவு செய்ததன்படி இன்று ஒருநாள் மட்டும் இவ்விழா நடைபெறுகிறது.

அதனால்தான் பட்டிமன்றம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளை இவ்வாண்டு தவிர்க்கப்பட்டுள்ளது.

ராஜராஜனின் 1035ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவாக நடைபெறும் இவ்விழாவின் போது, மூலவரான பெருவுடையார் கருவறையிலும், மற்ற தெய்வ பீடங்களின் கருவறையிலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்வதே பேரரசனுக்குச் செலுத்தும் சிறந்த நன்றிக் கடனாகும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையினை ஏற்று, இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டதின் பேரில், தமிழில் மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை நடைபெற்றது.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தேவாரம், திருமந்திரம் முதலிய மந்திரங்கள் ஓதி அர்ச்சனை நடைபெற்றது.

இதே போல், கடந்த 05.02.2020 அன்று நடைபெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கிலும் தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையினை ஏற்று, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அக்குடமுழுக்கு தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்தப்பட்டது.

இப்பொழுது நடைபெற்ற தஞ்சைப் பெரியகோயில் சதயவிழாவிலும் பெருவுடையார் கருவறை மற்ற தெய்வங்களின் கருவறைகள் அனைத்திலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்ய ஏற்பாடுகள் தமிழ் உணர்வாளர்களை மகிழ்வித்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே