ராமநாதபுரம் : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது

ராமநாதபுரத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது கணவர் இறந்த நிலையில், தனது 10 வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தனது கணவரின் தாயாரது வீட்டிற்கு அப்பெண் தனது மகளை அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் சித்தப்பாவான அர்ஜூனன், தனது நண்பர் தர்மராஜ் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

அர்ஜூனனுக்கு போதை அதிகமானதால், சிறுமியை அவரது தாயார் வீட்டில் தான் அழைத்துச்சென்று விடுவதாக தர்மராஜ் கூறியுள்ளார்.

நண்பர் தானே என்று நம்பி அர்ஜூனனும் அவருடன் சிறுமியை இருசக்கர வாகனத்தில் அனுப்பியுள்ளார்.

ஆனால் செல்லும் வழியில் சிறுமியிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி தனது தாயிடம் நடந்ததைக்கூறி அழுதுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து தர்மராஜிடம் விசாரித்ததற்கு, அவரை ஆபாசமாக திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சிறுமியின் தாயார், கீழத்தூவல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தர்மராஜா மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைத்தனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே