நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்ட மாரிதாஸ், போலி இமெயில் முகவரியை உருவாக்கி தொடர்ந்து தவறான தகவல்களை வெளியிட்டு வந்தார்.
இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நியூஸ் 18 தொலைக்காட்சி நிர்வாகம், மாரிதாசிடம் ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, மக்களிடையே மத ரீதியாக பிளவு ஏற்படுத்தும் வகையிலும், செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் மாரிதாஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக நியூஸ் 18 சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தனி நபர் ஒருவர் நியூஸ் 18 தொலைக்காட்சி குறித்து ஆதாரமற்ற செய்திகளை வெளியிடக் கூடாது என மாரிதாசை கண்டித்த நீதிபதி கார்த்திகேயன், சமூகவலைதளங்களில் இதுவரை மாரிதாஸ் வெளியிட்ட அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டார். மேலும், வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் மாரிதாஸ் பதிலளிக்கவும் உத்தவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.