இருசக்கர வாகனத்தில் 4 பேர் பயணம் – லாரியில் மோதி அனைவரும் பலி..!!

திருப்பூர், பெருமாநல்லூர் அருகே பழுதடைந்து நின்ற லாரி மீது மோதி, ஒரே இரு சக்கர வாகனத்தில் பயணித்த 4 இளைஞர்கள் பரிதாபமாகப் பலியாகினர்.

பெருமாநல்லூர் சாலை பூலுவபட்டியை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் சபரி பாலமுருகன்(25). செட்டிபாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் பிரவீன்(24), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ஆனந்த் (26) மற்றும் பாண்டியன் நகர் பிரகாஷ் மகன் பாலமுருகன் (23).

இவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தில் பனியன் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

4 பேரும் நேற்று நள்ளிரவு ஒரே இரு சக்கர வாகனத்தில், பெருமாநல்லூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றுள்ளனர்.

அப்போது ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, ராக்கியாபட்டி அருகே சென்றபோது, ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி பழுதடைந்து நின்றுள்ளது.

அப்போது வேகமாகச் சென்று லாரியின் பின்பக்கத்தில் இருசக்கர வாகனம் மோதியதில், சபரி பாலமுருகன், ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து பலத்த காயம் அடைந்த பாலமுருகன் மற்றும் பிரவீன் ஆகியோரைப் பொதுமக்கள் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர்.

இதுதொடர்பாகப் பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே