17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது நாளை புயலாக வலுவடைந்து மேற்குக் கடற்கரையை ஒட்டி வடக்கு திசையில் நகரும்.

இதன் காரணமாக தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரள கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 45 – 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதன் காரணமாக இன்று முதல் ஜுன் 4-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்படுகிறார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவையும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவையும் ஒட்டி இருக்கும் என்று தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே