சேகர் ரெட்டி வீட்டிலிருந்து ரூ. 24 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது. உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என சிபிஐ மனுத் தாக்கல் செய்ததால் வழக்கை முடித்து வைத்தது சிபிஐ நீதிமன்றம்.
2016ல் பணமதிப்பிழப்பின் போது தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கட்டுகட்காக ரூ. 2000 நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
தொழிலதிபர் சேகர் ரெட்டி பழைய நோட்டுகளை, வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றியதாகப் புகார் எழுந்தது.
இதனால் அரசுக்கு 247.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் சேகர் ரெட்டி மற்றும் அவருடன் பிரேம்குமார், ஸ்ரீனிவாசுலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கானது சென்னை 11வது சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஜவஹர் முன்பு நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் உரிய ஆதாரங்கள் கிடைக்காததால் சேகர் ரெட்டி உட்பட 6 பேர் மீதான வழக்கை சிபிஐ நீதிமன்றம் முடித்து வைத்தது.
இது தொடர்பான முந்தைய 2 வழக்குகளிலும் சேகர் ரெட்டி விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 3வது வழக்கிலும் ஆதாரங்கள் இல்லை என வழக்கு முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.