சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதை பொருள் வழக்கில், நடிகை தீபிகா படுகோனேவிடம் என்.சி.பி.,யினர் இன்று (செப்., 26) ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ஜூன் மாதம் தனது குடியிருப்பில் இறந்து கிடந்தார்.
அவரது மரணம் தற்கொலையா, கொலையா என விசாரிக்கின்றனர்.
இவ்வழக்கில் மத்திய அரசின் மூன்று புலனாய்வு அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.
மரண வழக்கை சி.பி.ஐ.,யும், அதில் தொடர்புடைய போதை பொருள் வழக்கை என்.சி.பி.,யும், அவரது பணம் மோசடியாக மாற்றப்பட்டதாக கூறப்படும் வழக்கை அமலாக்க துறையும் விசாரிக்கிறது.
இதில் போதை பொருள் வழக்கு தற்போது தீவிரமடைந்துள்ளது.
![](https://i0.wp.com/www.tamilexpressnews.com/wp-content/uploads/2020/09/Actress-Deepika-Padukone-in-the-investigation-ring-of-the-Narcotics-Prevention-Unit-police-..-.jpeg?resize=800%2C450&ssl=1)
சுஷாந்தின் காதலி ரியா, அவரது பணியாளர்களிடம் நடத்திய விசாரணையில் சுஷாந்த் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் உடையவர் என கூறினர்.
காதலி ரியா, வாட்ஸ்அப் குரூப் ஒன்றின் மூலம் சுஷாந்திற்கு கஞ்சா ஆர்டர் செய்துள்ளார்.
அந்த மெசேஜ்களை மீட்டு ஆராய்ந்தனர்.
அதனடிப்படையில் நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் கரீஷ்மா, சுஷாந்தின் திறன் மேலாளர் ஜெயா சாஹாவை விசாரணைக்கு அழைத்தனர்.
ஜெயா சாஹா பயன்படுத்திய வாட்ஸ்ஆப் கணக்கில், போதை பொருள் பற்றி விவாதிக்க ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அட்மின் தீபிகா படுகோனே என்று அவர் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்று காலை 9:50 மணிக்கு என்.சி.பி.,யின் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் தீபிகா படுகோனே ஆஜரானார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரது மேலாளர் கரீஷ்மாவும் வந்தார்.
இருவரிடம் சுஷாந்த் மரணம், போதை பொருள் பயன்பாடு, வாட்ஸ்ஆப் குரூப் விவாதம் பற்றி விசாரித்துள்ளனர்.
6 மணி நேர விசாரணைக்கு பிறகு 4 மணி வாக்கில் தீபிகா வெளியேறினார்.
நேற்று நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
போதை பொருள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டால் பெரிய கைதுகள் இருக்கும் என்கின்றனர்.