தெலங்கானாவில் இன்று முதல் ஏப்.30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்..!!

தெலங்கானாவில் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று எதிரொலி காரணமாக இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ”கரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் போன்றவை இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

மருத்துவமனைகள், பத்திரிகை அலுவலகங்கள், பெட்ரோல் நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், டெலிவரி சேவை போன்றவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த இரவு நேர பொதுமுடக்கம் மே 1-ம் தேதி காலை 5 மணியுடன் நிறைவடையும்.

கரோனா பரவல் விகிதத்திற்கேற்ப இரவு நேர ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே