வீட்டிலிருந்தே மருத்துவ ஆலோசனை பெற நியூ ஆப்

வீட்டிலிருந்தபடியே டாக்டர்களிடம் ஆலோசனை பெறவும், அவர்கள் கையெழுத்துடன், மருந்து சீட்டு பெறவும் வழிவகுக்கும், புதிய, ‘மொபைல் ஆப்’ நடைமுறைக்கு வந்துள்ளது.

கொரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சிறிய மருத்துவ மனைகள் மூடப்பட்டு உள்ளன.

பல்வேறு நோய்களுக்கு, சிகிச்சை பெற்று வந்தவர்கள் டாக்டர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

நோய்க்கு உரிய மருந்து, மாத்திரைகள் விபரம் தெரிந்தாலும் அதனை வாங்க முடியாத சூழல் உள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, ‘E Z கிளினிக்’ சார்பில், ‘Digiprez Doctor’ என்ற புதிய மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ‘E Z கிளினிக்’ தொழில்நுட்ப அலுவலர் குருபிரசாத் கூறியதாவது, டாக்டர்கள் மற்றும் நோயாளிகள் என யார் வேண்டுமானாலும் இந்த செயலியில் இணைந்து கொள்ளலாம்.

இதன் வாயிலாக தங்களிடம் ஆலோசனை பெற்றவர்களுக்கு, டாக்டர்கள் மருந்து சீட்டை வழங்க முடியும்.

மருந்து சீட்டில், சம்பந்தப்பட்ட டாக்டரின் பதிவு எண், அவர் கையெழுத்து ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

மருந்துகளின் பெயர், பெரிய எழுத்தில் இடம் பெற்று இருக்கும்.

மேலும், ‘கியூ ஆர் கோடு’ம் இருக்கும்.

எனவே, டாக்டர் வழங்கிய மருந்து சீட்டில், வேறு மருந்துகளை யாரேனும் கூடுதலாக சேர்த்தால், அதை கண்டுபிடித்து விடலாம்.

டாக்டர்கள், செயலிக்குள் சென்று, நம் பெயரை பதிவு செய்த பின், நோயாளிகளுக்கான செயலியை பதிவு செய்ய வேண்டும்.இந்த மொபைல் போன் செயலியில், இதுவரை 50 டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர்.

தற்போது ஊரடங்கு என்பதால், இந்த செயலிக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.

ஊரடங்கு முடிந்த பின், மாதம், 650 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

இந்த செயலி வழியே விரும்பிய டாக்டர்களின், ‘அப்பாயின்ட்மென்ட்’ பெற முடியும்.

மே மாதத்திலிருந்து, வீடியோ கால் வழியே டாக்டர்களிடம் சிகிச்சை பெறும் வசதியை ஏற்படுத்த உள்ளோம்.

மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி இதை வடிவமைத்து வருகிறோம் என குருபிரசாத் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே