“நீட், ஜெஇஇ தேர்வுகளை இனி தள்ளிவைக்க முடியாது”… மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்: உச்சநீதிமன்றம்!!

நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை மேலும் தள்ளி வைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 11 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், “தேர்வை தள்ளி வைப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். கொரோனாவால் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது.

அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் நகர்ந்து தான் ஆக வேண்டும். ஓராண்டை இழப்பதற்கு மாணவர்கள் தயாராக உள்ளனரா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வும் செப்டம்பர் 1முதல் 6 ஆம் தேதி வரை ஜே.இ.இ தேர்வும் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ள இந்த சமயத்தில் தேர்வுகள் நடத்துவது மாணவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் பதில் அளித்த மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சமூக இடைவெளியோடு தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் தேர்வு குறித்த முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது எதிர்காலத்தின் மாணவர்களின் நலனை கேள்விக்குறியாக்கும் என தெரிவித்த நீதிமன்றம், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே