மும்பையில் பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி, அவரின் மனைவி மீதான தாக்குதல் தொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது காவல்துறை!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் இரு சாதுக்கள் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரடியாக குற்றம்சாட்டி பேசி அவதூறு செய்த ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் வழக்குப் பதிவு ெசய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸார் அர்னாபுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் கடந்த 16ம்தேதி இரு சாதுக்கள் உள்ளிட்ட 3 பேர் சில்வாசாவுக்கு வந்து கொண்டிருந்த போது கடாக்சின்சாலை கிராமத்தில் ஒரு கும்பலால் திருடர்கள் என நினைத்து அடித்துக் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக சாதர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பாக நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அர்னாப் கோஸ்வாமி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அவதூறு குற்றம்சாட்டிப் பேசினார்.

இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் போலீஸ் நிலையத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்கம், ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது புகார் அளித்தார்.

அந்த புகாரில் இரு சமூகத்தினருக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அர்னாப் பேசியுள்ளார்.

சமூகத்தின் ஒற்றுமையை குலைக்கும் வகையிலும், மதநம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சோனியா காந்தி மீது சுமத்தியுள்ளார்’ எனத் தெரவித்துள்ளனர்.

இதையடுத்து அர்னாப் கோஸ்வாமி மீது ராய்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலும் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர்னாப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த புகாரையடுத்து, அர்னாப் மீது ஐபிசி 117, 120(பி), 153(ஏ),(பி), 295(ஏ),290(ஏ), 500, 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பேசியுள்ளனர்.

மாநில உள்துறை அமைச்சர் பாலசகேப் தோரட் ட்விட்டரில் கூறுகையில், ‘ பால்கர் தாக்குதலை வகுப்புவாதத்தோடு தொடர்புபடுத்தும் அர்னாப் கோஸ்வாமியின் செயலைக் கண்டிக்கிறேன்.

எதிர்பாராமல் நடந்த சம்பவத்தை காங்கிரஸ்தலைவர் சோனியா காந்திக்கு எதிராக அவதூறாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது.

முதல்வரிடம் பேசியுள்ளேன் அர்னாப் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்

இதனிடையே, நேற்று நள்ளிரவு அர்ணாப் கோஸ்வாமியும் அவரின் மனைவியும் காரில் வீட்டுக்குச் சென்றனர்.

அப்போது இருவரின் காரையும் பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரு நபர்கள் காரை மறித்து தாக்க முயன்றனர்.

ஆனால் அர்னாப் காரை விட்டு இறங்காததால் அவரின் காரின் மீது கறுப்பு மையை தெளித்துவிட்டு தப்ப முயன்றனர்.

அப்போது அங்கிருந்த அர்னாப் பாதுகாவலர்கள் இருவரையும் பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் இருவரும் இளைஞர் காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்ததாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் ட்வி்ட்டரில் வீடியோவும் வெளியிட்டுள்ளார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே