சென்னை அயனம்பாக்கத்தில் வசித்து வந்த பிரிசில்லா(50), தனது மகள் ஈவாலின்(20) உடன் மதுரவாயிலில் இருந்து அயனம்பாக்கத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

மதுரவாயல் பைபாஸ் சாலையில் செல்லும் போது, அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறி அப்பகுதியில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்தது.

சுமார் 12 அடி ஆழம் கொண்ட அந்த கால்வாயில் விழுந்த ஈவாலின் மற்றும் பிரிசில்லா படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயணைப்புத்துறையின் உதவியோடு மீட்டு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், ராஜன்குப்பம் பகுதியைச் சேர்ந்த திரு.எட்வின் என்பவரின் மனைவி திருமதி கரோலின் பிரமிளா மற்றும் அவருடைய மகள் செல்வி ஈவிலின் கெசியா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம்பட்டு கிராமம், நொளம்பூர் அருகே மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்து, அவருடைய குடும்பத்திற்கு நேற்று (7.12.2020) இரங்கல் தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில், கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த திருமதி கரோலின் பிரமிளா மற்றும் அவருடைய மகள் செல்வி ஈவிலின் கெசியா ஆகியோரது குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய், ஆக மொத்தம் 4 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே