நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும் எனவும், நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி அன்றும் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது மாணவர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதோடு, சரியான போக்குவரத்து வசதிகளும் இல்லாததால் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என்றும்; நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.
இதேபோல் பா.ஜ.க. தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி நீட் உள்ளிட்ட தேர்வுகளை தீபாவளிக்கு பிறகு நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.
நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்க கோரி உச்ச நீதிமன்றத்திலும் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.