லலிதா ஜூவல்லரி கொள்ளை : 5 கிலோ நகையுடன் சிக்கிய கொள்ளையன்

திருவாரூரில் 5 கிலோ நகைகளுடன் ஒருவர் பிடிபட்டுள்ள நிலையில் அந்த நகைகள் திருச்சியில் லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகையா?? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். இதையடுத்து, கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு திருவாரூர் மடப்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கினர்.

அதிலிருந்து ஒருவர் பையை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பினார். பையை சோதனை செய்தபோது அதில் 5 கிலோ தங்க நகைகள் இருந்தன.

இதையடுத்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர் பெயர் சுரேஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட நகைகள் லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டதா?? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கைது செய்யப்பட்ட மணிகண்டன் விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே