கும்பளே, ஹர்பஜனை பெருமைப்படுத்த அஸ்வினை மட்டம் தட்டுகிறாரா யுவராஜ் சிங்?

அகமதாபாத் கிரிக்கெட் மைதானம் பிட்சில் கும்பளே, ஹர்பஜன் பந்துவீசியிருந்தால் 800 விக்கெட் சாதனையை படைத்திருப்பார்கள் என்று கூறி சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மட்டம்தட்டியுள்ளதாக ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் கும்ப்ளே, கபில் தேவ் மற்றும் ஹர்பஜன் சிங்குக்கு அடுத்தபடியாக 400 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய நான்காவது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல் கல்லை அவர் எட்டியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். அதோடு முரளிதரனுக்கு அடுத்தபடியாக குறைந்த டெஸ்ட் போட்டிகளில் (77 போட்டிகள்) மட்டுமே விளையாடி 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையும் அஸ்வின் படைத்தார். ஹாட்லி, ஸ்டெய்ன் (80 போட்டிகளிலும்), ஹெராத் (84 போட்டிகளிலும்), கும்ப்ளே (85 போட்டிகளிலும்) 400வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துளள்னர்.

இந்தியாவுக்காக கும்ப்ளே (619 விக்கெட்டுகளும்), கபில் தேவ் (434 விக்கெட்டுகளும்), ஹர்பஜன் (417 விக்கெட்டுகளும்) வீழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக அஷ்வின் இணைந்துள்ளார். அவருக்கு இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பலரும் பாராட்டையம் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ட்விட்டரில் “டெஸ்ட் 2 நாள்களில் முடிந்துவிட்டது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதா எனத் தெரியவில்லை. அனில் கும்பளேவும் ஹர்பஜன் சிங்கும் இதுபோன்ற ஆடுகளத்தில் பந்துவீசியிருந்தால் ஆயிரம் மற்றும் 800 விக்கெட்டுகளை எடுத்திருப்பார்கள். எனினும் அக்‌சர் படேலுக்கு வாழ்த்துகள். என்ன ஒரு பந்துவீச்சு. அஸ்வின், இஷாந்த் சர்மாவுக்கும் வாழ்த்துகள்” என பதிவிட்டிருந்தார். யுவராஜ் சிங்கின் இந்தக் கருத்தை பல ரசிகர்கள் விரும்பவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே