மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலங்கள் இட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக மாணவர் சமூகம் பலகட்டப் போராட்டங்களை முன்னெடுத்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளன.
இதனால் போராட்டக் களம் வன்முறைக் களமாக மாறும் சூழல் ஏற்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
ஆனால் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதன் ஒருபகுதியாக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து திமுக மிகப்பெரிய பேரணியை சென்னையில் நடத்திக் காட்டியது.
தற்போது போராட்டம் புதுவடிவம் பெற்றுள்ளது என்றே கூறலாம்.
நேற்று பெசன்ட் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போடும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு உரிய அனுமதி பெறாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
அவர்களுக்கு எச்சரிக்கை அளித்து சில மணி நேரங்களுக்கு பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில் கோலம் போடும் போராட்டம் பல்வேறு இடங்களுக்கும் பரவியுள்ளது.
பலரும் தங்கள் வீட்டு முன்பு CAA, NRC-க்கு எதிராக கோலம் போட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வைரலாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
நேற்றைய தினம் திமுக எம்.பி கனிமொழி வீட்டு முன்பு CAA எதிர்ப்பு கோலம் போடப்பட்டிருந்தது.
இந்த சூழலில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு கோலம் போடப்பட்டுள்ளது.
அதில் வேண்டாம் CAA, NRC என்று இடப்பட்டுள்ளது. இதேபோல் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிலும், திமுக எம்.பி கனிமொழி வீட்டிலும் வேண்டாம் CAA, NRC என்று கோலம் போடப்பட்டுள்ளது.