மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளையின் உரிமையாளர் ஒருவர், மற்ற காளை ஒன்று தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
நூற்றுக்கணக்கான காளைகளும், அதனை அடக்க வீரர்களும் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், சோழவந்தான் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தங்களது காளையை பங்கேற்க அழைத்து வந்திருந்தார்.
களம் கண்ட காளையை பிடிக்க மாடு வெளியேறும் இடத்தில் நின்று கொண்டிருந்த ஸ்ரீதர், அவரது காளை வந்தபோது கழுத்தில் கயிறு கட்டி இழுத்து செல்ல முற்பட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த வழியில் சென்ற மற்றொரு காளைமாடு முட்டியத்தில் வலது பக்க வயிற்றில் படுகாயம் அடைந்த ஸ்ரீதர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.