ஜெ.அன்பழகன் நடப்பு கூட்டத் தொடரில் 3நாள்களுக்கு சஸ்பென்ட்…

ஆளுநர் உரையை கிழித்தெறிந்து பேரவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், உள்ளாட்சி துறை அமைச்சர் ஒருமையில் பேசியதால் அதிமுக- திமுக எம்.எல்.ஏக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பேசிய அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், ஜெ.அன்பழகனை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால் அன்பழகனை விரைவில் பேசி முடிக்கும்படி அறிவுருத்தினார்.

ஆனால் அதற்கு மறுத்த ஜெ.அன்பழகன் சபாநாயகர் மேஜை முன் சென்று சபாநாயகரிடம் வாக்குவாதம் செய்து ஆளுநர் உரையை கிழித்து வீசி எறிந்தார்.

இதனால் கோபமடைந்த சபாநாயகர் ஜெ.அன்பழகன் மீதான தீர்மானத்தை மீண்டும் கொண்டுவர வலியுறுத்த அதனை ஏற்று அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்தை மீண்டும் முன்மொழிந்தார்.

தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அவை விதிமுறைகளை மீறியதாலும். அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாலும் வரும் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், இந்த நடவடிக்கை திட்டமிட்டது போல் தெரிவதாக பேசினார்.

அதே போல இரண்டு நாட்களுக்கு மட்டும் தடைவிதிக்க வேண்டும் எனவும் அடுத்து வரக்கூடிய கூட்டத்தொடரில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது பேசிய அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், ஜெ. அன்பழகன் எப்போது பேசினாலும் பிரச்னைகளை ஏற்படுத்துவார் எனவும் எனக்கு தெரிந்து 9 முறை நிதிநிலை அறிக்கை, ஆளுநர் உரையை ஜெ.அன்பழகன் கிழித்தெறிந்திருப்பதாகவும், அன்பழகன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியான நடவடிக்கை தான் என பேசினார்.

இறுதியாக பேசிய சபாநாயகர் துரைமுருகன் வேண்டுகோள் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதன்பின் அன்பழகன் மூன்று நாளுக்கு மட்டும் நீக்குங்கள் என துணை முதல்வர் முன் மொழிந்தார்.

இதனையேற்ற சபாநாயகர் ஜெ.அன்பழகன் ஜனவரி 9 வரை மட்டும் பங்கேற்க அனுமதி இல்லை என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே