சிஎம்எஸ் 01 செயற்கைக்கோள் வெற்றி விஞ்ஞானிகளின் அயராத உழைப்பால் சாத்தியமானது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடையுடைய சிஎம்எஸ் 01 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, 6 உந்து விசை சக்தியுடன் உருவாக்கப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், சிஎம்எஸ் 01 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, ‘ விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் சிறப்பாக செயல்படுகிறது.அடுத்த 4 நாட்களில் செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலை நிறுத்தப்படும்.விஞ்ஞானிகளின் அயராத உழைப்பால் இது சாத்தியமானது.

ஏற்கனவே அனுப்பப்பட்ட ஜி – சாட் செயற்கைக்கோளின் தொடர்ச்சியாக சி.எஸ்.எஸ்.1 செயல்படும்.இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டுத் திறன் மற்றும் செயல்பாட்டால் தற்போதைய வெற்றி கிடைத்துள்ளது.

செயற்கைகோள் மற்றும் ராக்கெட் தயாரிப்பு ஆகிய இரு துறைகளில் விஞ்ஞானிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலான விஞ்ஞானிகள் சிறப்பாக செயல்பட்டு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளனர். விண்வெளி துறையில் தனியாருக்கு பங்களிக்கும் வகையில் அடுத்த செயற்கைகோளை இஸ்ரோ ஏவ உள்ளது.

பிக்சல் என்ற திட்டத்தில் ஆனந்த் என்ற செயற்கைகோளை பிஎஸ்எல்வி சி- 51 ராக்கெட் விண்ணில் செலுத்தும்.சந்திரயான் -3, ஆதித்யா, ககன்யான் திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும்,’ என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே