மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களின் நகல்களை டெல்லி சட்டசபையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றும் 22-வது நாளாக தொடருகிறது.

கடும் பனி, குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் தொடருகிறது.

விவசாய சட்டங்களில் திருத்தம் கொண்டு வரலாம் என்கிற மத்திய அரசின் யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றமும் கூட, விவசாயிகள் போராட உரிமை உள்ளது; அதுவரை விவசாய சட்டங்களை செயல்படுத்தக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி சட்டசபையில் மத்திய அரசின் விவசாய சட்டங்களை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் தீர்மானத்தின் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து விவசாய சட்டங்களின் நகல்களை சட்டசபையிலேயே கிழித்தும் எறிந்தார்.

அப்போது கேஜ்ரிவால் பேசியதாவது: மத்திய அரசின் விவசாய சட்டங்களை கிழித்து எறிகிறேன்.

மேலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைவிட மோசமானவர்களாக மத்திய ஆட்சியாளர்கள் மாறிவிடக் கூடாது எனவும் வேண்டுகோள் வைக்கிறேன்.

கொரோனா காலத்தில் விவசாய சட்டங்களை அவசர கதியில் கொண்டுவர வேண்டிய தேவை என்ன?

நாட்டின் ஒவ்வொரு விவசாயியும் இப்போது பகத்சிங்காக உருவாகி இருக்கின்றனர்.

ஆனால் மத்திய அரசோ, புதிய விவசாய சட்டங்களின் நன்மைகள் தொடர்பாக விவசாயிகளிடம் எடுத்துரைப்போம் என பேசி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் முதல்வரோ விவசாயிகளிடம் உங்கள் நிலங்கள் கையகப்படுத்தப்படமாட்டாது என்கிறார்.

இதுதான் விவசாயிகளுக்கு கிடைக்கப் போகும் நன்மையா?

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய மதகுரு உட்பட இதுவரை 20 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

அதாவது நாள்தோறும் ஒருவர் வீதம் உயிரை தியாகம் செய்து வருகின்றனர்.

இன்னமும் எத்தனை உயிர்கள்தான் உங்களுக்கு வேண்டுமோ? இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

முன்னதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களும் விவசாய சட்ட நகல்களை சட்டசபையில் கிழித்து எறிந்து எதிர்ப்பை காட்டினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே