முரசொலி வைத்திருந்தால் திமுககாரர், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி : ரஜினி

முரசொலி வைத்திருந்தால் அவர் திமுகவினர், ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அவர் அறிவாளி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

துக்ளக் பத்திரிக்கையின் 50வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு 50வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், தமாகா தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீடியோ வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்ததோடு சோ பற்றி புகழ்ந்து பேசினார்.

அதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சோ மீது உள்ள மரியாதையால் தான் பிரதமர், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு விழாவில் பங்கேற்கின்றனர்.

முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்றும், துக்ளக் வைத்திருந்தால் அவர் அறிவாளி என்றும் சொல்லிவிடலாம்.

செய்தி என்ற பாலில் பொய் என்ற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள். பொய்யை உண்மையாக்காதீர்கள். சோ ராமசாமி ஜனங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார்.

தற்போது சோ ராமசாமி போன்ற பத்திரிகையாளர்கள் தேவை.  சோ என்றால் துக்ளக். துக்ளக் என்றால் சோ. துக்ளக் பத்திரிக்கையை குருமூர்த்தி அதே ஒரிஜினாலிட்டியுடன் நடத்தி வருகிறார்.

சோ ஒரு ஜீனியஸ். ஜீனியஸ் என்பது படித்து வருவதல்ல பிறந்து வருவது. சோவை பெரியாளாக ஆக்கியவர்கள் அவரை எதிர்த்த கருணாநிதி மற்றும் பக்தவச்சலம்.

இந்திரா காந்தி அவசரநிலை கொண்டுவந்த காலத்தில் துக்ளக் பத்திரிகையில் கருப்பு அட்டைப் படத்தை போட்டது அவரை, இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.

கவலைகள் அன்றாடம் வரும் அதை நிரந்தரமாக்கி கொள்வதும், தற்காலிகமாக்கி கொள்வதும் உங்கள் கைகளில்தான் உள்ளது.

கவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நீ நோயாளி. தற்காலிகமானதாக ஆக்கிக் கொண்டால் நீ அறிவாளி.  கவலைகளை எல்லாம் தற்காலிகமானதாக ஆக்கிக் கொண்டவர் சோ ராமசாமி என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே