பொங்கல் திருநாளான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது.

அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில் நாளையும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது.

அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைக்கிறது.

முதலில் நாட்டாமைக்கு சொந்தமான காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும்.

அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படும். 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் குழுவாக களம் இறக்கப்படுவார்கள்.

ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இந்த குழு மாற்றப்பட்டு, மற்றொரு குழு களம் இறக்கப்படும்.

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பித்தளை அண்டாக்கள், சைக்கிள், குத்துவிளக்கு, வேட்டி-துண்டு போன்றவை பரிசாக வழங்கப்பட உள்ளன.

ஜல்லிக்கட்டை பலரும் கண்டு களிக்க வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி.க்களும் அமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே