கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குணமடைய வேண்டுகிறேன் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவரது உடல்நிலை சீராக உள்ளபோதிலும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு அறிகுறி எதுவும் இல்லாமல் லேசான தொற்று பாதிப்பு மட்டுமே இருப்பதால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
காவேரி மருத்துவமனையின் மருத்துவக் குழு அவரைத் தொடர்ந்து கண்காணிக்கவுள்ளது.
இந்த நிலையில், இருவரும் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக முதல்வர் பழனிசாமி சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.